ஆந்திராவில் 5 தொகுதிகளில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல்-டி.ஆர்.எஸ்.ஸுக்குப் பாதி வெற்றி
ஹைதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் அபாரமான திட்டத்தால் ஆந்திர இடைத் தேர்தலில் 5 தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டுமுறையில் தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற 7 தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மின்னணு வாக்குப் பதிவு மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக மீண்டும் வாக்குச் சீட்டுக்கு தேர்தல் மாறியுள்ளது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
ஆந்திராவின் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் கோரின. ஆனால் அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து படு புத்திசாலித்தனமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஒரு காரியத்தை செய்தது. தான் போட்டியிடும் 11 தொகுதிகளிலும் பெருமளவில் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியது. நூற்றுக்கணக்கில் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் தேர்தல் ஆணையம் திகைத்துப் போனது.
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் 64 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும் என்பதால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டது. தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியின் இந்த அட்டாக்கால் இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
மொத்தம் 926 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 213 பேரின் மனுக்கள் பின்னர் நிராகரிக்கப்பட்டன. நேற்று 282 பேர் வாபஸ் பெற்றனர். இதையடுத்து தற்போது 7 தொகுதிகளில் 64 அல்லது அதற்குக்குறைவான வேட்பாளர்களே உள்ளனர். இதனால் அங்கு மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுப்பாராவ் கூறுகையில், தற்போது 435 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சிர்பூர், சென்னூர், மன்சிரியால், தர்மபுரி, வெமுலவாடா, நிஜாமாபாத் அர்பன், சித்திப்பேட்டை தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படும்.
சிர்சிலா, ஹுஸூராபாத், கொருதலா, எல்லாரெட்டி, வாரங்கல் மேற்கு ஆகிய தொகுதிகளில் வாக்குச்சீட்டுமுறையில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இதன் மூலம் டிஆர்எஸ் கட்சியின் எண்ணம் பாதி வெற்றி அடைந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் வாக்குச் சீட்டு, மீதத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்று பிரித்து தேர்தல் நடத்துவதை தெலுங்குதேசம் எதிர்த்துள்ளது.