இலங்கை மீதான ஐ.நா. குழுவை இந்தியா ஆதரிக்க வேண்டும்-தா.பாண்டியன்
தர்மபுரி: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவிற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நில மோசடிகள், கொலை, கொள்ளை, விபத்துக்கள் போன்றவை அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு அலுவலகங்களில், ஆளும் திமுக கட்சியினர் தலையீடுகள் இருப்பதால், அரசுத் துறைகளால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
இது குறித்து சிவகங்கையில் வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் பரதன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் விரிவாக விவாதிக்கபடும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பீஹார், ஒரிஸா ஆகிய மாநிலங்களை காட்டிலும் பின் தங்கி 2.4 சதவீதமாக உள்ளது.
திருச்சியில் பாய்லர் தொழிற்சாலையுடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்து, மூன்றாண்டுகளில் எட்டு மின் நிலையங்கள் துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இது போன்ற முயற்சிகள் செய்யவில்லை. இதனால் தான் மின் பற்றாக்குறை உள்ளது.
தமிழகத்தில் 77 பொருளாதார மண்டலங்கள் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது 20 மட்டும் தான் செயல்பட்டு வருகிறது. பொருளாதார மண்டலங்களுக்காக தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு என்பதை அரசு விளக்க வேண்டும்.
வேலூரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவங்கி பத்தாண்டாகியும் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. இதற்கு தமிழக அரசு என்ன நவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1,900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த தொகை, முழுமையாக தமிழர்களுக்கு பயன்படுகின்றதா என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்கள் குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவிற்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்ட நிதி, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9- தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.