காமராஜர் சிலைக்கு கோஷ்டி, கோஷ்டியாக போய் மாலை போட்ட காங்கிரஸார்
சென்னை: வெட்கமே இல்லாமல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிக் கொள்ளும்
காங்கிரஸ்காரர்கள் இன்று காமராஜரின் பிறந்த நாளின்போது கூட ஒற்றுமையாக இருக்க
முடியவில்லை. தனித் தனி கோஷ்டியாக ஊர் ஊராக அவர்கள் மாலை போட்டு அஞ்சலி
செலுத்தி காமெடிக் காட்சியை மக்கள் கண்டு சிரித்தனர்.
காமராஜர் என்ற பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லாதவர்களே இன்று காங்கிரஸில்
பெரும் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றும்
நாக் கூசாமல் கூறி வருகிறார்கள்.
பிறந்த நாளன்றும், நினைவு நாளன்றும் மட்டுமே இவர்களுக்கு காமராஜர் கண்ணில்
தெரிவார். மற்ற நேரங்களில் காமராஜரை மறந்து விடுவார்கள். அவரது சிலை என்ன
நிலையில் இருக்கிறது என்பதைக் கூட கண்டு கொள்ள மாட்டார்கள்.
இந்த நிலையில் இன்று காமராஜருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி காங்கிரஸ்
காரர்கள், கஞ்சி போட்டுத் துவைத்து கதர் வேட்டி சட்டையுடன் காமராஜர்
சிலைகளுக்கு மாலை அணிவித்து தங்களது பக்தியை வெளிக்காட்டிக் கொண்டனர்.
அதை விட கொடுமை காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசி வரும் இந்த பாரம்பரியக்
கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று ஒருநாளாவது ஒற்றுமையுடன் இருந்தார்களா என்றால்
அதுதான் இல்லை.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள காமராஜர் சிலைக்கு இவர்கள் தனித் தனி கோஷ்டியாக போய் மாலை
போட்டு அஞ்சலி செலுத்தி கொடுமையான காட்சியை மக்கள் பார்த்து சிரித்துக்
கொண்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டிதான். அதற்கு அடுத்து
ப.சிதம்பரம் பிளஸ் கார்த்தி சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, இளங்கோவன்
கோஷ்டி என நிறைய கோஷ்டிகள். இந்த கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் தத்தமது
ஆதரவாளர்களுடன் தனித் தனி அணியாக சென்று மாலை போட்டு இந்த வருடத்து
சம்பிரதாயத்தை முடித்துக் கொண்டனர்.
முதலில் இவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்து ஒரே கட்சியாக மாறிக் கொள்ள
வேண்டும். அப்போதுதான் ஒரு வேளை நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தப்பித் தவறி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கூட ஒரே கட்சி ஆட்சி என்று மற்றவர்கள்
சொல்வார்கள். இல்லாவிட்டால் கூட்டணி ஆட்சி என்று கூறி விடும் அபாயமும் உள்ளது