பதவிக்கு ஆபத்து-குற்றாலத்தில் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் யாகம்
செங்கோட்டை: கர்நாடகத்தில் தங்களது அரசியலுக்கு ஆப்பு வைக்க பல ரூபங்களில் எழுந்துள்ள வியூகத்தால், அதிலிருந்து தப்புவதற்காக ரெட்டி சகோதரர்கள், குற்றாலத்தில் ஒரு யாகத்தை நடத்தி வருகின்றனர். 10 நாள் நடக்கும் இந்த யாகத்தின் கடைசி நாளின்போது ரெட்டி சகோதரர்கள் அதில் கலந்து கொள்வார்களாம்.பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கருணாகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களின் இன்னொரு சகோதரர் சோமசேகர ரெட்டி.
இவர்கள் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் கிரனைட் குவாரிகள், சுரங்கள் நடத்தி வருகி்ன்றனர். இவை சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
கர்நாடக அரசியலையே ஆட்டி படைக்கும் அளவுக்கு ரெட்டி சகோதரர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். கர்நாடக சட்டசபையில் ரெட்டி சகோதரர்களின் குவாரி முறைகேடு பெரும் பிரச்சனையை கிளப்பி வருகிறது.
இந்த ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம்தான் கர்நாடக அரசியலில் அதிகமாக உள்ளது. இவர்கள் கொட்டிக் கொடுக்கும் பணத்தை வைத்துததான் கடந்த சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் நடந்த இடைத் தேர்தலிலும் பாஜகவால் பெரும் வெற்றியைப் பெற முடிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக ரெட்டி சகோதரர்களை பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் பாஜக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எதியூரப்பாவுக்கே சிக்கலை ஏற்படுத்தினர் இந்த ரெட்டி சகோதரர்கள். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கே 'ஆப்பு' திரும்பி விட்டது.
இவர்களுக்கு எதிராக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சட்டசபையில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் பரத்வாஜும், ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக தொடருவதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். அவர்கள் நடத்தி வரும் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான விசாரணையை முடுக்கி விடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தங்களுக்கு வந்த ஆபத்து நீங்குவதற்காக குற்றாலத்தில் யாகம் ஒன்றை நடத்தி வருகின்றனர் ரெட்டி சகோதரர்கள். 10 நாள் யாகமாம் இது. அதில் ஐந்து நாள்யாகம் முடிந்து விட்டது.
ஆந்திர மாநிலத்தை தலையிடமாக கொண்ட மெளனசாமி மடம் குற்றாலம் திருவாங்கூர் பேலஸ் அருகில் உள்ளது. தமிழகத்தில் காஞ்சி மடத்தை போன்று மெளனசாமி மடம் ஆந்திராவில் பிரபலமானது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ரெட்டி, ராவ் சமூகத்தினர், அரசியல் பிரமுகர்கள் பலர் இங்கு வந்து செல்வது வழக்கம்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இந்த மடத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூ்ர்த்தி, மற்றும் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மெளனசாமி மடத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
குற்றாலத்தில் உள்ள இந்த மடத்தில் கடந்த ஒரு வாரமாக ரெட்டி சகோதரர்கள் ஏற்பாட்டில் ரகசிய யாகம் நடந்து வருகிறது. இதற்காக அந்த மடத்தில் தோரணங்கள் கட்டி பூஜை நடந்து வருகிறது. பூஜை நடத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட கன்னட புரோகிதர்கள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் மடத்திற்கு பின்புறம் உள்ள தர்மசாலாவி்ல் தங்கி பூஜை நடத்தி வருகின்றனர்.
மடத்தின் மேலாளர் மூர்த்தி தலைமையில் கடந்த ஒரு வாரமாக காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்த பூஜையின் இறுதி இரண்டு நாட்கள் ரெட்டி சகோதரர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெட்டி சகோதரர்கள் வருகிற 16ம் தேதி குற்றாலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.