மும்பை தாக்குதலில் ஐஎஸ்ஐக்கு தொடர்பு-ஹெட்லி கக்கிய உண்மை: குரேஷி கோபத்திற்கு பின்னணி!
மும்பையில் தாக்குதல் நடத்திய கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு படகு ஏற்பாடு செய்வதற்காக ஐஎஸ்ஐதான் ரூ. 25 லட்சம் பணத்தை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு கொடுத்ததாக ஹெட்லி கூறியுள்ளார். மேலும் ஐஎஸ்ஐ தொடர்பான மேலும் பல்வேறு விவரங்களையும் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகள் நேற்று வெளியானதால்தான் ஆத்திரமடைந்த குரேஷி, இந்தியாவின் மீது பாய்ந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் கராச்சியிலிருந்து மும்பைக்குச் செல்லத் தேவையான படகை வாங்குதவற்காக ஐஎஸ்ஐதான் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ரூ. 25 லட்சம் பணத்தை வழங்கியதாக ஹெட்லி கூறியுள்ளார்.
மேலும் விசாரணையாளர்கள் காட்டிய சில ஒலிப்பதிவுகளைக் கேட்ட அவர் அதிலிருந்து 2 பேரின் குரல்களை தெளிவாக அடையாளம் காட்டினார். அந்த இரண்டு குரல்களும், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அதிகாரிகளுடையது ஆகும். இவர்கள்தான் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 தீவிரவாதிகளையும் வழிநடத்தி, செயல்படுத்தி கட்டுப்படுத்தியவர்கள் என்றும் ஹெட்லி கூடுதலாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை சமீபத்தில் ஹெட்லியிடம் விசாரணை நடத்திய இந்திய விசாரணைக் குழுவிடம் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐ கொடுத்த பணத்தில் வாங்கிய படகின் மூலமாகத்தான் கராச்சியிலிருந்து தீவரவாதிகள் மும்பை நோக்கி வந்துள்ளனர். பின்னர் மும்பையை நெருங்கியதும் இந்தியாவைச் சேர்ந்த குபேர் என்ற படகை கடத்தி அதன் மூலம் மும்பைக்குள் வந்தனர்.
தற்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் தீவிரவாதியும், மும்பைத் தாக்குதலைக் கையாண்டவர்களில் ஒருவருமான சஜ்ஜத் மிர் என்பவனை, ஐஎஸ்ஐ தலைவரான அகமது சுஜா பாஷா சந்தித்துப் பேசியது குறித்தும் இந்திய விசாரணையாளர்களிடம் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
இந்த் தகவல்களின் அடிப்பையில்தான் மத்தியஉள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை பாகிஸ்தானை குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதற்குத்தான் குரேஷி பிள்ளைய தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.
மொத்தத்தில் தனது பக்க தவறுகள் படிப்படியாக அம்பலமாவதால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான், அதை நேற்று எஸ்.எம்.கிருஷ்ணா மீது கொட்டி விட்டது என்பது தெரிய வந்துள்ளது.