நானோ கார்களின் விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்
டெல்லி: நானோ கார்களின் விலையை உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன் மூலம் இனியும் இதை ஒரு லட்சம் கார் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனது முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கான கார் டெலிவரியை முடித்த நிலையில் கார் விலையை ஏற்றியுள்ளது டாடா மோட்டார்ஸ். நான்கு சதவீத அளவுக்கு கார் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் கூறுகையில், ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை முடித்துள்ளோம். அதன் பிறகு முன்பதிவு செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு கார் விலை உயர்வு குறித்து தகவல் தெரிவித்து வருகிறோம்.
உற்பத்தி செலவு அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக 3 முதல் 4 சதவீத அளவிலேயே விலை உயர்வை நிர்ணயித்துள்ளோம் என்று கூறியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
இருப்பினும் விலை உயர்வு எப்போது முதல் அமலாகும் என்பது தெரியவில்லை.
தற்போதைய அறிவிப்பின்படி முதலில் முன்பதிவு செய்த 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.23 லட்சம் முதல் ரூ. 1.72 லட்சம் வரையிலான விலையில் (டெல்லி விலை) நானோ கார்கள் கிடைக்கும்.
இனிமேல் வாங்குபவர்களுக்கு இதை விட கூடுதலான விலையில் கார் கிடைக்கும். அதாவது இனியும் இதை 1 லட்சம் ரூபாய் கார் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.