ரெட்டி சகோதரர்களை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை-எதியூரப்பா உறுதி
டெல்லி வந்துள்ள அவர் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அமைச்சரவையிலிருந்து ரெட்டி சகோதரர்களை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட வேண்டும். பிறகுதான் நீக்குவது குறித்து பேச முடியும்.
எனது அமைச்சரவையைச் சேர்ந்த எந்தஅமைச்சர் மீதும் இதுவரை புகார் ஏதும் இல்லை. ஒரு வேளை புகார் இருந்தால், நிச்சயம் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நீக்கப்படுவார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
அமைச்சர்கள் கருணாகரன் ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான புகார்கள் அரசியல் விரோதத்தில் எழுந்தவையாகும். லோகாயுக்தா அமைப்புக்கு முழு அதிகாரம் உள்ளது. அது சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பு. எனவே இதைத் தாண்டி சிபிஐ விசாரணைக்குப் போக வேண்டியதில்லை.
அமைச்சர் சிதம்பரத்துடன் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்தும், லோகாயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே விலகல் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்தும், தற்போது மகாராஷ்டிராவால் எழுப்பப்பட்டு வரும் பெல்காம் பிரச்சினை குறித்தும் விவாதித்தேன்.
சட்டவிரோத சுரங்கத் தொழிலை ஒழிக்க வேண்டுமானால் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.அப்போதுதான் இந்தப் பிரச்சினை தீரும். இதையும் ப.சிதம்பரத்திடம் தெரிவித்தேன். இதை விட வேறு வழியே கிடையாது.
கர்நாடகத்தில் உப லோகாயுக்தா அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான கட்டடத்தை திறந்து வைக்க வருமாறு உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
கர்நாடக எம்.எல்.ஏக்கள் போராட்டம் வாபஸ்
இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டு நேற்றே சட்டசபையிலிருந்து வெளியேறி விட்டனர்.