For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழுத்தத்திற்கு அஞ்ச மாட்டோம், அடிபணியவும் மாட்டோம்-நாம் தமிழர் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: இயக்கத் தலைவர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகித்தாலும், எந்தவித நெருக்கடிக்கும் நாம் தமிழர் இயக்கம் அஞ்சாது, அடிபணியவும் செய்யாது என்று நாம் தமிழர் இயக்கம் கூறியுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் மீது தமிழக முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி கைது செய்துள்ளார்.

சிங்கள பேரினவாத இலங்கை அரசு அன்றாடம் எமது மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறது. எண்பதுகளில் தொடங்கி இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இறையாண்மையுள்ள ஒரு தேசத்தின் சட்டமும் போலீசும் இந்த மீனவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? இலங்கை ஒரு அண்டை நாடு என்றால் அண்டை நாட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனை அன்றாடம் கொல்கிறானே ஏன்?

இலங்கை அரசு தமிழர்கள் என்றாலே அவர்களை அழித்தொழிக்கும் தீர்மானத்தோடு இருக்கிறது. அவன் இலங்கையில் இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி. தமிழனை வெட்டினால், கொன்றால் கூட கேட்க நாதியில்லை என்பது சிங்களனுக்குத் தெரிந்து விட்டது.

தட்டிக் கேட்பது மட்டுமல்ல கொலைகாரப் பாவிகளை விமர்சனம் செய்து பேசக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் அனுமதிப்பது இல்லை.தமிழ் மீனவர்களின் உயிரை விட சிங்கள மாணவர்கள் மீது இங்குள்ள அரசுகள் கரிசனையுடன் இருக்கின்றன.

இங்குள்ள அரசுகள் தமிழக மீனவனைக் கொன்றவனைப் பாதுகாக்கின்றது, அதற்கு எதிராக குரல் கொடுத்தவனை தனிமைச் சிறையில் அடைக்கின்றது.

தமிழினத்தை அழித்து விட்டு தமிழர்களுக்கு உரிமையைத் தருவோம் என்று சொல்லும் ராஜபக்‌ஷேவுக்கும் தமிழினம் அழிவதற்கு துணை போய்விட்டு மொழி காக்க செம்மொழி மாநாடு நடத்துவதாக கூறும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு?

உள்ளூரில் தமிழர்கள் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலை வாய்ப்பில்லாமல், பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். கடுமையான மின்வெட்டால் தமிழக மெங்கிலும் சிறு தொழில்கள் நசிந்து விட்டன. விலைவாசி விண்ணை முட்டி என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஏழை மக்கள்.

ஆனால் கருணாநிதியோ அது குறித்து கவலைப்படாமல் புகழ் பாடும் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார். போர் வெறியர்களான சிங்கள ராஜபக்சே, மற்றும் சோனியாவின் மனம் புண்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுகிறார்.

உலகமே ராஜபக்‌ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது அரசும் சிங்களனையும் ராஜபக்‌ஷேவையும் பாதுகாக்க சட்டம் கொண்டு வருகின்றார்கள்?

உண்மையில் இது யாருக்கான அரசு?

ராஜபக்சேவின் சொல்படி கேட்டு நடக்கும் தேவை சோனியாவுக்கு இருக்கலாம் கருணாநிதிக்கு இருக்கலாம் ஆனால் நாம் தமிழர் இயக்கத்திற்கோ அதன் தலைவர் சீமானுக்கோ இல்லை. எம் மண்ணின் மைந்தர்களான மீனவ மக்களைக் காக்கவும், திமுகவின் அராஜக ஆட்சியில் சிக்கி வதைபடும் தமிழக மக்களிடம் இருந்து காங்கிரஸ், கருணாநிதி கும்பலை வேரறுக்கும் பணியை நாம் தமிழர் இயக்கம் தொடர்ந்து செய்யும்.

அடக்குமுறைகளைக் கண்டு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் பெரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது.அதனைத் தூண்டிவிட்டுத்தான் நீங்கள் இயக்கம் வளர்த்தீர்கள், அந்த நெருப்பு உங்களைச் சுட்டுப் பொசுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X