சென்னை டூ மதுரை-வைகோ, அழகிரி, எஸ்.எஸ்.சந்திரன் ஒரே விமானத்தில் பயணம்
மதுரை: சென்னையில் இருந்து மதுரைக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வும் பயணித்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் சென்றனர்.
மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒரே விமானத்தில் பயணித்ததால் விமான நிலையத்தில் அவர்களது ஆதரவாளர்களிடையே பரபரப்பு காணப்பட்டது.
விமானம் மதுரையை அடைந்ததும், முதலில் மு.க.அழகிரி வெளியேறினார். பின்னர் வைகோ கிளம்பினார். கடைசியாக எஸ்.எஸ்.சந்திரன் இறங்கிச் சென்றார்.
வழக்கமாக எதிர்பாராதவிதமாக எதிரெதிராக எதிர் துருவத்தில் இருக்கும் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கம். ஆனால் நேற்றைய பயணத்தின்போது வைகோவும், அழகிரியும் அப்படி செய்யவில்லையாம்.
இதில் விசேஷம் என்னவென்றால் வைகோவும், எஸ்.எஸ்.சந்திரனும் ஒரு காலத்தில் தீவிர திமுகவினர். பின்னர் வைகோ பிரிந்தபோது எஸ்.எஸ்.சந்திரன், மதிமுகவில் இணைந்தார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முதல் முறையாக நடந்த தேர்தலின்போது மதிமுக சார்பில் போட்டியிட்டவர் சந்திரன். ஆனால் பின்னர் மதிமுகவிலிருந்து விலகிய அவர் அதிமுகவில் ஐக்கியமானார் என்பது சுவாரஸ்யமானது.