வருகிற சட்டசபைத் தேர்தலோடு அதிமுக காலியாகி விடும்-ஆண்டிப்பட்டியில் அழகிரி முழக்கம்
ஆண்டிப்பட்டி தொகுதி கடமலைக்குண்டுவில் தி.மு.க. சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி பேசுகையில்,
திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலின் போதே அடுத்த சட்டசபை தேர்தல் முடிவில் அ.தி.மு.க. இருக்காது என்று நான் கூறினேன். அதனை இப்போதும் வலியுறுத்தி கூறுகிறேன். வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சி இருக்காது.
இங்கு பேசியவர்கள் பலர் ஜெயலலிதா இந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆன பிறகு ஒரு முறை கூட இங்கு வரவில்லை என்றார்கள். ஒரு வேளை வந்தாலும், ஹெலிகாப்டரில் வந்து இறங்கி அரைமணிநேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளார் என்கிறார்கள்.
இன்றைய தினம் முதல்வர் கலைஞர் 87 வயதிலும், அதிகாலை 4 மணிக்கு எழுந்து நாளிதழ்களை பார்க்கிறார். அதில் வரும் குறைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேசுகிறார். தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதும் அவர் கோட்டைக்கு சென்று மக்கள் பணியாற்றுகிறார். பின்னர் இல்லம் வரும் அவர் அங்கு உணவருந்தி விட்டு மீண்டும் கட்சிப்பணி, அரசியல் பணி என்று சுணக்கமின்றி பணியாற்றுகிறார்.
ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர், அவருடைய கட்சி அலுவலகத்திற்கு வருவதே அபூர்வமாக இருக்கிறது. அவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதை கூட அந்த கட்சி தொண்டர்கள் விழாவாக எடுக்கும் நிலையே அங்கு உள்ளது.
அவர் சட்டசபைக்கு வந்த போது ஒரு நாளாவது, ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து இருக்கிறாரா? ஆனால் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இந்த பகுதி மக்களின் நலனுக்காக பாடுபட்டு இருக்கிறோம்.
இங்குள்ள மக்கள், எங்களுக்கு பஸ் வசதி இல்லை என்றும், தண்ணீர் பிரச்சினை நீண்ட நாளாக இருப்பதாகவும் கூறினார்கள். அவர்களின் இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக 10 நாட்களுக்குள் பஸ் வசதியை செய்து கொடுப்பேன். அதே போன்று தண்ணீர், சாலை வசதியையும் விரைவில் நிறைவேற்றி தருவேன்.
கலைஞர் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வழியில் ஆட்சி நடத்துகிறார்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் தந்த கலைஞர் தனது வீட்டையே மருத்துவமனையாக்க தானம் தந்துள்ளார். ஆனால் சிலரோ பிளானே இன்றி வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் முதல்வரை சந்தித்த போது விரைவில் தேர்தலை வைத்து விடலாமே என்றேன். ஆனால் கலைஞரோ தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஒரு ஆண்டு காலத்தில் மேலும் பல நல்ல திட்டங்களை வழங்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அவரிடம், எப்போது தேர்தல் வந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதி கூறினேன். அந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார் அழகிரி.