கோவையைத் தொடர்ந்து திருச்சியில் ஆக. 24ல் ஜெ. ஆர்ப்பாட்டம்
சமீபத்தில் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் திரண்டு திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா, பல்வேறு புகார்களை சரமாரியாக அடுக்கினார். முதல்வர் கருணாநிதி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், திமுக அரசு மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்ளை சுமத்தினார்.
இந்தப் புகார்களுக்கு தொடர்ந்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் திருச்சியில் அடுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், மின்தட்டுப்பாடை எதிர்த்தும் திருச்சியில் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவைக் கூட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியது போல திருச்சியில் ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர்.