கும்பாவுருட்டி: பாதிக்கப்பட்டவர்களை அறிய தமிழக போலீஸ் உதவியை நாடும் கேரளா
தமிழக-கேரள எல்லையான அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி-மணலாறு பகுதிகளில் குளிக்க சென்ற தமிழக பெண்களை அங்குள்ள வனபாதுகாப்பு குழுவினர் பலத்காரம் செய்த சம்பவம் அம்மாநில இணைய தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கேரள சட்டமன்றத்தில் எதிர் கட்சிகள் பிரச்சனையை கிளம்பியதால் அச்சன்கோவில் வனப்பகுதி வனக்குழுவில் பணியாற்றிய செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த சாகுல் ஹமீது, அச்சன்கோவிலை சேர்ந்த மணிகண்டன், உன்னி கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் தான் இக்கொடூரத்தை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து குளத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் இவர்களை கைது செய்து புனலூர் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இந் நிலையில் இன்று கேரள சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் பேசுகையில்,
கும்பாவுருட்டி அருவி பகுதியில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார்கள் எதுவும் அரசுக்கு வரவில்லை. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யார்...யார்...என்று தெரியாததால் இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கும்பாவுருட்டி பகுதியில் இக்கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை கண்டறிய தமிழக போலீஸ் உதவியை நாட உள்ளோம் என்றார்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணியில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் தனிப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.