இருப்பிட சான்றுக்கென சிறப்பு ரேஷன் கார்ட்!-10 நாளில் கிடைக்கும்
சென்னை: ''Address Proof'' உள்ளிட்ட சான்றுகளுக்காக மட்டும் என தனி ரேஷன் கார்டுகள் அறிமுகமாகவுள்ளன. இதைக் கொண்டு ரேசன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது.
லைசென்ஸ் வாங்க, தேர்தல் அட்டை வாங்க, கேஸ் இணைப்பு வாங்க, பாஸ்போர்ட் வாங்க, கல்வி்க் கூடங்களில் சேர, வழக்குப் போட, ஜாமீன் வாங்க என அனைத்துக்குமே ரேசன் கார்டுகள் மிக மிக அவசியமாகிவிட்டன.
'ரேசன் கார்டு இல்லாதவன் அரை மனிதன்' என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், இந்தக் கார்டுகளை வாங்குவது எளிதல்ல. ரேசன் கார்டுகளை வழங்கிவிட்டால் அதற்கேற்க உணவுப் பொருட்களையும் கூடுதலாக தர வேண்டும் என்பதால் கார்டுகளை வினியோகிக்க அரசு மிகுந்த தயக்கம் காட்டுகிறது.
ஆனால், உணவுப் பொருளுக்காக அல்லாமல் இருப்பிடச் சான்றுக்காவது ரேசன் கார்டு தேவை என்பதால் அதை வாங்க மக்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, ரேசன் கடைகளில் பயன்படுத்த முடியாத தனி ரேசன் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
ரேஷனில் எந்த பொருளும் வாங்க விருப்பம் இல்லாதவர்களுக்கு இருப்பிட சான்றிதழுக்காக என தனியாக ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 'என் கார்ட்' என்ற தனி ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு்ள்ளது.
இந்த சிறபபு ரேசன் கார்டுகள் இருப்பிடத்தை மையமாக வைத்து வழங்கப்படும். இந்த ரேஷன் கார்டை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முடியாது. நிரந்தரமானதாக அதே முகவரியில் இருக்கும். வேறு இடங்களுக்கு மாறுதலாகி சென்றால் அங்கு இந்தக் கார்டு செல்லாது. புதிய முகவரியில் புதிய 'என் கார்டை' வாங்க வேண்டும்.
புதிய கார்டு பெற தாங்கள் குடியிருக்கும் இடத்தின் ஏதாவது ஒரு சான்றுடன் விண்ணப்பம் செய்தால் போதும். அந்த முகவரியில் அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த சிறப்பு ரேஷன் கார்டை வழங்குவர். 10 நாட்களுக்குள் இந்தக் கார்ட் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் விருப்பம் மற்றும் உத்தரவு.
அதை அதிகாரிகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு நிச்சயம் பெரும் உபயோகமாக இருக்கும்.
ஆனால், இதற்கும் தலையாரி, தாசி்ல்தார், அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து வாங்கி வா, லோக்கல் கவுன்சிலர், எம்எல்ஏவிடம் லெட்டர் வாங்கி வா என்று இழுத்தடிப்புகள் நடந்தால் இந்தத் திட்டத்தால் முழுப் பயன் இருக்காது. தலையாரி, விஏஓ, இன்ஸ்பெக்டர் போன்றவர்களுக்கு 'இன்னொரு வகை வருமானத்துக்கே' இந்தத் திட்டம் பயன்படும்.
தனி கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசின் ஆணை நேற்று வெளியிடப்பட்டது.
தனி கார்டு பெற விரும்புவோர் சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலும், மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது 1.95 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவை தவிர லட்சக்கணக்கான போலி அட்டைகளும் உள்ளன. இதைக் களைய அரசும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்தாலும் இவை முழுமையாக ஒழிந்தபாடில்லை.
அடையாள அட்டை வழங்கும் தபால்துறை:
அதே போல தபால் துறை சார்பிலும் தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டையை பெற ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான நேரடி விசாரணை முடிந்த பிறகு 15 நாட்களுக்குள் அட்டை கிடைக்கும்.