பெல்லாரிக்கு காங். பாதயாத்திரை-சித்தராமையா தொடங்கி வைத்தார்
பெங்களூர்: சட்டசபையில் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று பெல்லாரி சலோ என்ற பெயரில் சட்டவிரோத சுரங்க் தொழிலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடைபயணப் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையை இதை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும், சட்டசபைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இன்று பெல்லாரி சலோ என்ற பெயரில் பாதயாத்திரை போராட்டத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.
சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாஜக அரசின் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறதாம்.
பெங்களூரில் தொடங்கிய இந்த யாத்திரை பெல்லாரியில் முடிகிறது. தினசரி 20 கிலோமீட்டர் தூரத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் நடக்கவுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 3 கிலோமீட்டர் வீதம் அவர்கள் நடக்கவுள்ளனர்.
பெங்களூரில் இந்த யாத்திரையை இன்று காலை சித்தராமையா தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் யாத்திரை தொடங்கியுள்ளது. யாத்திரைப் பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக பாஜக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜை சந்தித்தார். அவரிடம், தங்களது பெல்லாரி சலோ போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது, பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எங்களது பாதயாத்திரை நிகழ்ச்சியின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அரசுதான் அதற்குப் பொறுப்பு.
நாங்கள் பாதயாத்திரை திட்டத்தை அறிவித்தவுடனேயே, பெல்லாரியைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு (ரெட்டி சகோதரர்களின் உறவினர்) பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூ்க விரோதிகள் சிலரை பார்த்துப் பேசியுள்ளார். எனவே எங்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்த அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. எனவேதான் போலீஸ் பாதுகாப்பும், உரிய முறையில் பாதுகாப்பும் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன் என்றார்.
வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான ஆகஸ்ட் 9ம் தேதி பெல்லாரியில் இந்த யாத்திரையை முடிக்கிறது காங்கிரஸ்.
இதற்கிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்திற்குப் பதிலடியாக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் நான்கு பேரணிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த பேரணிகளில் பாஜக அரசின் 2 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூறுவோம். சட்டவிரோத சக்திகளின் விஷமப் பிரசாரத்திலிருந்து கர்நாடகத்தை காப்போம் என மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.
தாவணகரேயில் முதல் பேரணி நடைபெறுகிறது. அடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி குல்பர்காவிலும், 12ம் தேதி மைசூரிலும், நான்காவது பேரணி 20ம் தேதி பெல்லாரியிலும் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவின் இந்த பாதயாத்திரை, பேரணி அறிவிப்புகளால் கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தொண்டர் மயங்கி விழுந்து மரணம்
இதற்கிடையே காலையில் தொடங்கிய பாதயாத்திரையின்போது ஒரு தொண்டர் நடக்க முடியாமல் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பாதயாத்திரையில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நடந்து வருகிறார்கள் காங்கிரஸார்.