போலி சான்றிதழ் வழக்கில் கைதான ஏகாம்பரம் சிறையில் மிரட்டப்பட்டாரா?
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் கல்வித் துறை ஊழியர் ஏகாம்பரம் மிரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையத்தைச் சேர்ந்த உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடம், கல்லூரிக் கல்வித் துறை ஊழியர் ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இவர்களில் திருவேங்கடத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நாளையுடன் இவருக்கு போலீஸ் காவல் முடிகிறது. இதையடுத்து ஏகாம்பரத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் ஏகாம்பரம் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்மையில் ஏகாம்பரத்தை சந்திப்பதற்காக அவரது சகோதரர் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஏகாம்பரம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏகாம்பரத்தின் வழக்கறிஞரிடம் அந்த தகவல்களை அவர் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஏகாம்பரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சந்தித்துள்ளனர். போலி சான்றிதழ் விவகாரத்தில் திருவேங்கடத்திற்கும், அவருக்கும் மட்டும் தான் தொடர்பு உள்ளது என்றும், விசாரணையில் வேறு யாரையும் பற்றி கூறக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் வழக்கு நடக்கும் போது உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரை இன்னும் சஸ்பெண்டு செய்யவில்லை என்றும், வேறு பிரச்சனை எதுவும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இப்படி மிரட்டுவது போலவும், வேண்டுகோள் விடுப்பது போலவும் அவர்கள் பேசியுள்ளனர். இது பற்றி போலீசாரிடமோ, சிறை அதிகாரிகளிடமோ நாங்கள் புகார் கொடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
இது குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரு நாளைக்கு சிறைக்கு நிறைய பேர் வந்து செல்கின்றனர். இதில் இவர்கள் யார் என்று எப்படி கூறுவது, மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என்றார்.