கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்: கொலை, கொள்ளை, வெடிமருந்து தயாரித்தல் போன்ற வழக்குகளில் சிக்கிய தி.மு.க. பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆட்களை கடத்தி மிரட்டல், வழிப்பறி, வெடிமருந்து தயாரித்தல் உட்பட 39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி வி.சி.ராஜேந்திரன் (45). இவர் ஒரு தி.மு.க. பிரமுகர்.
இவர் மீது 2 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், கலவரத்தை துண்டியதாக 9 வழக்குகள், வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 வழக்குகள், சொத்து கேட்டு மிரட்டி ஆட்களை கடத்தியதாக 15 வழக்குகள், 2 வெடிமருந்து வழக்குகள் என மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இவர் கடந்த 20-ம் தேதி வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சித்தையன் என்பவரையும், அவரது மனைவி சுப்புலட்சுமியையும் காரில் கடத்தி, சொத்து கேட்டு மிரட்டி, வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தில் எரியோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்துச்சாமி எஸ்.பி. பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார். போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.