ஈரோட்டில் மத மாற்ற முயற்சி சம்பவம்-பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் மோதல்
ஈரோடு: கிறித்துவ அமைப்பைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் தலித் மக்கள் சிலரை மத மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மோதல் மூண்டது.
கிறித்துவ அமைப்பைச் சேர்ந்த மத போதகர் ஒருவர், ஈரோடு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு, தலித் மக்கள் சிலரை மத மாற்றம் செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சிலர், அந்த மதபோதகரை கடத்தி நாடார் மேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வைத்திருந்தனர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஸ்டூடியோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மத போதகரை மீட்க முயற்சி செய்தனர்.
இதனால், அவர்கள் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்பு அது மோதலாக வெடித்தது. இதில், அந்த ஸ்டூடியோ-வை வி.சி.நிர்வாகிகள் அடித்து உடைத்துவிட்டு, அங்கிருந்த மத போதகரை மீட்டுச் சென்றனர்.
இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.