ஜெயேந்திரர் 76வது ஜெயந்தி விழா- 76 பேருக்கு பசுக்கள் தானம்
இந்த தினத்தையொட்டி இன்று காலை சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகளின் அனுஷ்டானத்திற்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரர் ஆகியோர் மலர்களால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மகா பெரியவர் பீடத்தில் பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து ஜெயேந்திரருக்கு விஜயேந்திரர் மலர் கிரீடம், மலர் மாலை, பட்டு சால்வை, தங்க காசு மாலை, ருத்திராட்சை மாலை அணிவித்தார். பின்னர் தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் எனப்படும் பாத பூஜையை விஜயேந்திரர் செய்தார்.
பின்னர் 76 நாதஸ்வர கலைஞர்களுடன் 108 பால் குடம் ஏந்தி பெண்கள் சங்கர மடத்தில் இருந்து ராஜவீதி வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து ஏழை மக்களுக்கு தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
76 பேருக்கு பசுமாடுகள் கோ தானமாக வழங்கப்பட்டன.
முன்னதாக மகா பெரியவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் கன்னிகா பூஜையும் நடத்தப்பட்டது. சிறப்பு யாகங்களும் நடந்தன.