கள்ள நோட்டு கும்பலை வளைக்க நள்ளிரவில் அதிரடி:8 பேர் கைது
நெல்லை: கன்னியாகுமரியில் கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேர் சிக்கினர்.
தமிழகத்தில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு வலைப்பதற்கான பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. கியூ பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தியதில் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த பலர் சிக்கியுள்ளனர். இந்த சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஆட்டி படைக்கும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ஒரு கும்பல் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களி்ன் முக்கிய நகரங்களில் அறை எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
கேரளாவில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விடுபவர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கியூ பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஜார்க்கண்ட் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த முகமது மத்தேயு, உபைதூர் சேக், நசீர் ஷேக், முபாரக் சேக், முகமது சபிக்குல் சேக், முகமது அஸ்ரபுல், முகமது முஸ்தபா, முஜிபூர் சேக் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நேற்றிரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.