கர்நாடக தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சிக்கிமுக்கு அதிரடி மாற்றம்
டெல்லி: சர்ச்சைக்குரிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் பி.டி.தினகரன். இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்ற வக்கீகல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து தினகரன் மீதான புகார்களை விசாரிக்க உத்தரவிட்டார் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.டி.தினகரனை நியமிக்கும் பரிந்துரையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்ற காலேஜியம். அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும்படி மத்திய சட்டத்துறைக்கும் பரிந்துரை அனுப்பியது.
இந்த நிலையில் தினகரனை சிக்கிமுக்கு மாற்றும் உத்தரவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்றுஒப்புதல் அளித்தார். இதுகுறித்து சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்த பின்னர் பி.டி.தினகரனை சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றும் அறிவிக்கையை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உத்தரகாண்ட் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் தத்தமது புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.டி.தினகரனை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எந்த ஒரு நீதிபதியையும், அவர் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் கூட, தடாலடியாக நீக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.