தேர்தல் தோல்விக்குப் பிறகும் இளங்கோவன் பாடம் கற்கவில்லை-நாம் தமிழர் சாடல்
சென்னை: முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தியதாலும், ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் அவருக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது. மாறாக வாய்க்கொழுப்புடன் இன்னும் பேசிக்கொண்டு திரிகின்றார் என்று கூறியுள்ளது நாம் தமிழர் இயக்கம்.
இது குறித்து நாம் தமிழர் இயக்க செய்தி தொடர்பாளர் கூத்தன் விடுத்துள்ள அறிக்கை:
பெரியாரின் பேரன் என்று கூறிக்கொண்டு பகலிலும் தன்னிலை மறந்து பேசும் குணம் கொண்டவர் சோனியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் வழக்கம் போல் வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டி இருக்கின்றார்.இதனைப்படித்தால் அவர் இன்னும் அரசியலில் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது.
அவர் தனது பேட்டியில் சில முத்துக்களை உதிர்த்திருக்கின்றார். அவருக்கு நாம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அண்டை நாடுகளோடு பிரச்னை ஏற்படும்போது சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்முறையைத் தூண்டக் கூடாது. இலங்கை அரசு தமிழ் மீனவன் மீது தாக்குதல் நடத்தினால் பேசித் தீர்க்க வேண்டும்.ஆனால் சீமான் வன்முறையைத் துண்டுகின்றார் என்று கூறியிருக்கின்றார் தன்னிலை மறந்த இளங்கோ.
சாதாரண மனிதர்கள் இடையே பிரச்சனை இருந்தால் பேசித் தீர்க்கலாம்.ஆனால் இங்கு நம் மீனவர்களை அடிப்பதே இலங்கை அரசு தானே, காலம் காலமாக இது நடக்கின்றது. எத்தனை தடவை முறையிட்டும் இது தீரவில்லை. இலங்கை அரசு துளி கூட கேட்கவில்லை. இந்த நிலையில் சீமானைக்குறை கூறுவதை விட்டு விட்டு இதனைத் தடுக்க துப்பில்லாத அவர் "அன்னை" என்று கூறிக்கொண்டு திரியும் சோனியாவை கண்டனம் செய்வதே உண்மையாக இருக்கும்.
இது போக அவருக்கு நாம் சொல்லிக்கொள்வதற்கு நிறைய இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகின்றோம்.
சென்ற தேர்தலில் மான மறவன் முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தியதாலும், ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் அவருக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது. மாறாக வாய்க்கொழுப்புடன் இன்னும் பேசிக்கொண்டு திரிகின்றார். இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலுடன் அவர் அரசியலை விட்டே ஒதுக்கப்படுவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.