என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
கொல்லம்: கொச்சியில் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவி்ல் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புனலாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக முக்கிய நகரங்களில் இந்த அமைப்பிற்கு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் என்ஐஏ நீதிமன்றம் கொச்சியில் உள்ள ரவிபுரத்தில் உள்ளது. இங்கு தமிழக அரசு பஸ் எரிக்கப்பட்ட வழக்கு, உள்பட 4 வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அடிக்கடி அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், நீதிமன்றத்தை தகர்க்கவும் சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து எர்ணாகுளம் ஆயுதப்படையை சேர்ந்த துப்பாக்கிய ஏந்திய 7 போலீசார் என்ஐஏ நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.