திருப்பதி மலையில் மேலும் ஒரு சிறுமியை தாக்கிய சிறுத்தை
திருப்பதி: திருப்பதியில் சிறுத்தை தாக்குதல் தொடர்வதால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த 27-ந்தேதி திருப்பதி மலைப்பாதையில் காளஹஸ்தியை சேர்ந்த கோகிலா என்ற சிறுமி சிறுத்தை ஒன்றால் தாக்கப்பட்டார். சிறுத்தை தன் மகளை கவ்விக் கொண்டு ஓடப் பார்த்தபோது, சிறுமியின் தந்தை தன்னால் முடிந்த அளவிற்கு பலமாக இழுத்தார். இதனால் சிறுமியை விட்டுவிட்டு சிறுத்தை ஓடியது.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் இதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கோகிலா தாக்கப்பட்ட அதே மலைப்பகுதியில் கல்யாணி என்ற சிறுமியும் சிறுத்தையால் தாக்கப்பட்டார். இதில் கல்யாணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் அவளுக்கு திருப்பதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்களால் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் திருப்பதி மலைக்கு பக்தர்கள் நடந்து செல்ல தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
சிறுத்தையால் சிறுமிகள் தாக்கப்பட்ட காளிகோபுரம் பகுதியை வனத்துறை அதிகாரி மல்லிகார்ஜூனா பார்வையிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது,
தேவஸ்தானம் காளிகோபுரம் பகுதி அருகே மான் பூங்கா ஒன்றை அமைத்துள்ளது. இதில் சுமார் 280 மான்கள் உள்ளன. சிறுத்தை நிச்சயமாக மான்களை வேட்டையாடத்தான் வந்திருக்கும். ஆனால், தற்போது சிறுமிகளை தாக்கி மனித ரத்தத்தின் வாடையை நுகர்ந்துள்ளது. எனவே, அந்த பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்களை அது தாக்கும் அபாயம் உள்ளது.
தற்போது அந்த சிறுத்தை காளிகோபுரம் முதல் 7-வது மைல் வரையிலான 2 கி.மீ. தூரத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை உயிருடன் பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அது விரைவில் பிடிபடக் கூடும் என்று அவர் கூறினார்.