31ம் தேதி முதல் இராக்கில் தாக்குதலை நிறுத்தும் அமெரிக்கப் படைகள்
'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி மாதிரி'.. இராக்கில் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிக் கொண்டு படைகளை அனுப்பினார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
விளைவு.. அங்கு புதிதாக பல தீவிரவாதப் படைகள் உருவெடுத்தன. அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இவர்கள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கப் படைகள் நடத்திய கண்மூடித்தனமான விமானத் தாக்குதல், தரைப்படை தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி இராக்கியர்கள் பலியாயினர்.
ஜார்ஜ் புஷ் குடும்பம் விரும்பியபடி சதாம் ஹூசேனின் ஆட்சி முடிவுக்கு வந்தததோடு சதாமும் அவரது மகன்களும் கொல்லப்பட்டனர். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஆனால், அமெரிக்கா எதிர்பாராதபடி ஈரானிய அரசின் ஆதரவு பெற்ற ஷியாயாக்களே ஆட்சியைப் பிடித்தனர். இப்போது அவர்களை எதிர்த்து சன்னி பிரிவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த அமைப்புகளும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் அமைதியாக இருந்த இராக்கில் இன்று தீவிரவாதம் தலைதூக்கி அந்தப் பிராந்தியத்தையே அச்சுறுத்தி வருகிறது.
இந் நிலையில் இனி அங்கு தொடர்ந்து படைகளை வைத்திருப்பதால் தனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவற்றை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே போரினால் ஊனமடைந்த அமெரிக்கப் படையினரிடையே அட்லாண்டாவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இராக்கில் வரும் 31ம் தேதி முதல் அமெரிக்கப் படைகள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடாது. அந்தப் பணியை இராக்கியப் படைகளிடம் ஒப்படைக்கவுள்ளோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றார்.
இப்போது அங்கு 65,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஒபாமா பதவியேற்றவுடன் இராக்கிலிருந்து 50,000 படைகளை வாபஸ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.