சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்ற வேண்டும், பிரஜாபதி கொலை வழக்கையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தனது இடைக்கால அறிக்கையில் சிபிஐ கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது சிபிஐ. ஆனால் தற்போது அப்படி எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று சிபிஐ மறுத்துள்ளது. மேலும் அமீத் ஷாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அது விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி கூறுகையில், குஜராத்தை விட்டு இந்த வழக்கை மாற்றுமாறு நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு கோரிக்கை வைக்கவில்லை. அப்படி வெளியான செய்தியில் உண்மை இல்லை. அமீத் ஷாவை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
குஜராத் இந்தியாவின் ஒரு பகுதியா, இல்லையா?
இதற்கிடையே, குஜராத்தை விட்டு வழக்கை மாற்றும் சிபிஐயின் திட்டத்தை முதல்வர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது குஜராத் மாநில நீதித்துறைக்கு விழுந்த பெரும் அடி, பெருத்த அவமானம். குஜராத் இந்தியாவின் ஒரு பகுதியா இல்லையா என்பது மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் ஒரு பகுதிதான் குஜராத் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டால், ஏன் அதை ஒரு எதிரி மாநிலமாகவே எப்போதும் பார்த்து வருகிறது மத்திய அரசு? என்று கேட்டுள்ளார் மோடி.
10 நாள் காவலில் அனுமதிக்க கோரிக்கை
முன்னதாக அமீத் ஷாவை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் துள்சியும், அமீத் ஷா சார்பில் ராம் ஜேட்மலானியும் ஆஜரானார்கள்.
ஷாவை சிபிஐ காவலில் விட ராம்ஜேட்மலானி எதிர்ப்பு தெரிவித்தார். துள்சி வாதிடுகையில், போலீஸ் அதிகாரிகள், குற்றவாளிகளுடன் இணைந்து ஆள் கடத்தல் உள்ளிட்டவற்றில் அமைச்சராக இருந்த அமீத் ஷா ஈடுபட்டது, சட்டத்தை கேலிக்கூத்தாக்கியுள்ள செயல் என்றார்.
முந்தைய விசாரணையின்போது ஷா ஒத்துழைப்பு தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் தரவில்லை. எனவேதான் மேலும் 10 நாள் விசாரணைக்கு எடுக்க விரும்புகிறோம் என்றார் துள்சி.
தொடர்ந்து அவர் வாதிடுகையில், மிகப் பெரிய குற்றத்தை அமீத் ஷா செய்துள்ளார். ஒருவர் (சோராபுதீன்) கொலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரில் பார்த்த சாட்சியான கெளசர் பீ கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது அசாதாரணமான குற்றம்.
அமீத் ஷாவிடமிருந்து பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றார் துள்சி.