தூத்துக்குடி துறைமுகத்தில் கம்யூட்டர் கழிவுகள் பறிமுதல்: அதிகாரிகள் மீட்பு
தூத்துக்குடி: துபாய், மாலத்தீவு நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கதிர்வீச்சு தன்மை கொண்ட எலக்ட்ரானிக் கழிவுகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கன்டெய்னர்களின் ஆவணங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அதில் துபாயில் உள்ள அஜ்மான் என்ற இடத்தில் இருந்த கேரள மாநிலம் கலூரைச் சேர்ந்த ஆரோ வெண்ட் என்ற நிறுவனத்திற்கு வந்த கன்டெய்னரில் பயன்படுத்த முடியாத கம்யூட்டர் மானிட்டர் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவை கதிர்வீச்சு தன்மை கொண்டது என தெரிய வந்தது.
மேலும், மாலத்தீவில் இருந்து கோவை அம்பாள் டிரேடர் என்ற நிறுவனத்திற்கு வந்த மற்றொரு கன்டெய்னரின் ஆவணங்களில் இரும்புக் கழிவுகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை போட்டனர். அப்போது அதில் யூ.பி.எஸ்., இன்வெர்டர், ஜெனரேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நிக்கல் கேட்னியத்தாலான 133 பழைய பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று துபாயில் இருந்து கேரள மாநிலம் கோட்டையம் கீழ்காட்டில் என்ற மில்லுக்கு வந்த கன்டெய்னரை சோதனையிட்டதில் அதில் தடைவிதிக்கப்பட்ட 148 கேட்னியம் பேட்டரிகள் இருந்தன.