இலங்கையை ஆளும் கொலைகாரர்கள், சதிகாரர்கள்: சந்திரிகா கடும் விமர்சனம்
புத்தளம்: இலங்கையில் நெடுங்காலமாக நடந்துவந்த போர் முடிவடைந்தும் இன்னும் அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விமர்சித்துள்ளார்.
மேலும், அவர் சதிகாரர்கள், கொலைகாரர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் இலங்கை அரசியலில் இடம் உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி புத்தளம் பிஸ்ருல் ஹாபி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சந்திரிக்கா கூறியதாவது,
பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் மூலம் மட்டும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. வடகிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆளும் அரசு எந்த தீர்வும் காண முயலவில்லை.
மேலும், தற்போதைய அரசில் மற்றவர்கள் யாருக்கும் இடம் கொடுக்காமல் ஒரு குடும்பமே ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் எந்தவிதமான தீர்மானத்தையும் யாரேனும் கொண்டு சென்றாலும் அது வீண் முயற்சி தான்.
இன்றைய அரசியலில் நல்லவர்களுக்கு இடம் இல்லை. சதிகாரர்கள், கொலைகாரர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் இடம் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் கல்வியில் பின்னடைவு கண்டவர்கள், நாட்டுக்காக தம்மையே அற்பணிக்க முடியாதவர்கள் என்று அவர் கூறினார்.