பாஜகவை விட அபாயகரமானது காங்கிரஸ்-கூறுகிறார் குமாரசாமி
தும்கூர் மாவட்டம் சிரா என்ற இடத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி, எங்களது கட்சிக்கு எதிரிகள்தான். இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். ஆனால் பாஜக எவ்வளவோ பரவாயில்லை. இது சாதாரண பேய்தான். உண்மையில் காங்கிரஸ்தான் பாஜகவை விட ஆபத்தானது, பயங்கரமானது.
ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக பாத யாத்திரை போவதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களான சிவக்குமாரும், ரமேஷ் குமாரும், ரெட்டி சகோதரர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டவர்கள் ஆவர். இவர்கள் தான் எனக்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் புகார் கூறக் காரணம்.
இவர்கள் முதல்வர் எதியூரப்பாவுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஜெயச்சந்திரா முதல்வர் வீட்டுக்கு வந்து போகிறார்.
இப்படி செயல்படுபவர்கள் பாதயாத்திரை போவதாக கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. மத்தியில் இவர்களது ஆட்சிதான் உள்ளது.ஆனாலும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு இவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றார் அவர்.
சிலநாட்களுக்கு முன்புதான் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்பட எந்தக் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வந்தாலும் அதை ஏற்கத் தயார் என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா அறிக்கை விட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், பாஜக சாதா பேய், காங்கிரஸ்தான் பயங்கர பேய் என்று குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.