சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம் பாயும்
சென்னை: சட்டவிரோதமான முறையில், முக்கியச் சாலைகளில் அதி வேகமாக பைக்குகளை ஓட்டி ரேஸ் நடத்துவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் ரவி கூறுகையில்,
சென்னை நகரில் இதுவரை போக்குவரத்து பாதுகாப்புக்காக 400 சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 100 துருப்பிடிக்காத சாலைத் தடுப்புகளும், 75 ஷெல்டர் தடுப்புகளும் உட்பட ஆயிரம் தடுப்புகளை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சிகள் நாளையும், நாளை மறுநாளும் சென்னை கடற்கரை சாலையில் நடைபெறுகிறது. இதனையொட்டி இந்த இரு நாட்களிலும் காலையில் காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல சுதந்திர தினத்தையொட்டி வரும் 14ம் தேதி இரவு முதல் பீச் ரோட்டில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. 15ந் தேதி காலையிலும் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்வது சட்ட விரோதமாகும். அவ்வாறு சட்டத்தை மீறி அதிக வேகத்தில் பைக்குகளை ஓட்டினால் வழக்கு தொடரப்படும். இரண்டு முறைக்கு மேல் வழக்கில் சிக்கினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
ஆர்டிஓ அலுவலகம் மூலம் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய கால தாமதம் ஆவதால் போலீசாரே அதனை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசை கோரியிருக்கிறோம். அரசு அது பற்றி பரிசீலித்து வருகிறது. அனுமதி கிடைத்ததும் வேகமாக பைக் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இதே போல சாலைகளில் வேகமாக பைக் ஓட்டும் ரேஸ் நடத்தி அடிக்கடி விபத்துக்களை உருவாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 384 விபத்துக்கள் சென்னை நகரில் நடந்துள்ளன. இந்தாண்டு 2 விபத்து சம்பவங்கள் மட்டும் குறைந்துள்ளது. இதனை வெகுவாக குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.