காமன்வெல்த் போட்டிக்காக இதுவரை ரூ.28,054 கோடி செலவு-அமைச்சர் ஜெயபால் ரெட்டி
டெல்லி: காமன்வெல்த் போட்டி தொடர்பாக இதுவரை ரூ. 28,054 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு பெருமளவில் ஊழல் புரிந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணக்குத் தணிக்கைத் துறை, மத்திய அமலாக்கப் பிரிவு ஆகியவை பல முக்கிய தகவல்களை சேகரித்துள்ளன. ஊழல் பெரிய அளவில் நடந்திருப்பதும் உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிக்காக இதுவரை ரூ. 28,054 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயபால் ரெட்டி லோக்சபாவில் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தலைநகரில் வசதிகளை மேம்படுத்தவும் ரூ.16,560 கோடியை டெல்லி மாநில அரசு அளிக்கிறது. மத்திய அரசு ரூ.11,494 கோடி செலவு செய்கிறது. மைதானம் கட்டுவதற்கு போட்டி ஒருங்கிணைப்பு குழுவுக்கு ரூ.670 கோடி மட்டுமே நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசு மூலம் இது கொடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார் ரெட்டி.