சித்ரா கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்தது 3 நாட்களுக்குப் பின் நின்றது: தொடரும் எண்ணெய் அகற்றும் பணி
மும்பை: மும்பையில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கடந்த 3 நாட்களாக கசிந்த எண்ணெய் நேற்று மாலையில் தானாக நின்றுள்ளது.
மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல் மைல் தொலைவில் காலிஜியா 3, எம்.எஸ்.சி. சித்ரா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் கடந்த சனிக்கிழமை மோதின. இதில், எம்.எஸ்.சி. சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.
கடந்த 3 நாட்களாக இருந்த எண்ணெய் கசிவு தானாக நின்று விட்டது. எனினும் கடலில் படிந்துள்ள எண்ணெயை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் இருந்து மேலும் எந்த கண்டெய்னர்களும் கடலுக்குள் விழவி்ல்லை.
கடலில் பரவியுள்ள எண்ணெய் படலத்தை அகற்ற குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று மகாராஸ்டிர அரசு தெரிவித்துள்ளது. சுமார் 350 டன் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இது தவிர்த்து நச்சுத் தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் அடங்கிய 31கண்டெய்னர்கள் கப்பலில் உள்ளது.
கடலோரக் காவல்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபதுத்தப்பட்டுள்ளது. தானே, நவி மும்பை, ராய்கட் கடற்கரையோரங்களில் எண்ணெய் படலம் இல்லை. உரான் கடற்கரையோரம் விழுந்த 2 கண்டெய்னர்களில் பால் பவுடர் தான் உள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பல் துறைத் தலைவர் சதிஷ் அக்னிஹோத்ரி கூறியதாவது,
கடலில் விழுந்த கண்டெய்னர்கள் மிதக்கும் கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டெய்னர்களை மீட்கும் பணியில் ஸ்மித் சால்வேஜ் சிங்கப்பூர் என்ற கம்பெனியின் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இன்னும் 2 நாட்களில் மேலும் நிறைய கருவிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த மாத இறுதியில் தான் கப்பல் மீட்பு பணியையும், கசிவை முழுமையாக அப்பபறப்படுத்தும் பணியையும் தீவிரமாக தொடங்க முடியும் என்று அவர் கூறினார்.
கப்பலில் மொத்தம் 1,219 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் சுமார் 200 முதல் 250 வரை கடலில் விழுந்து விட்டது. அவற்றில் இருந்து மணிக்கு 2 டன் எண்ணெய் கசிந்து கொண்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் சுனில் ஷெட்டி தெரிவித்தார்.
இந்த எண்ணெய் கசிவால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.