தியாகியை அவமதித்த மத்திய அரசுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம்
சென்னை: சுதந்திர போராட்ட தியாகியை அவமதித்த மத்திய அரசு-க்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர் லோகநாதன். சுதந்திரப் போராட்ட தியாகி. தனக்கு தியாகி பென்ஷன் கோரி மத்திய அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பினார். ஆனால், அதை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இதனால், இவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் லோகநாதனின் மனுவை புதிதாக பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவுக்குப் பின்னும், லோகநாதனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பென்ஷன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்ச மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவாக செயல்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதி மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
சுதந்திரப் போராட்ட தியாகியின் உணர்வுகளை, அதிகாரிகள் புரிந்து கொள்ளாததையே இந்த செயல் காட்டுகிறது. சொற்ப தொகைக்காக 20 ஆண்டுகளாக அவர் போராடுகிறார். உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாதது துரதிர்ஷ்டவசமானது.
தான் அடைந்த துன்பங்களை விவரித்து, தலைமை நீதிபதிக்கு மனுதாரர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவரது துயரத்தையும், மன உளைச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்க்கும் எவரும், கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது
நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகியின் கஷ்டங்களை ஒவ்வொரு குடிமகனும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வளவு உயர்ந்தவர்களை மதிக்கவில்லை என்றால், வேறு யாரை தான் அதிகாரிகள் மதிக்கப் போகின்றனர்?
இப்போது கூட நீதி வழங்க இயலவில்லை என்றால், நீதி பரிபாலணத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைந்து விடும்.
எனவே, மத்திய அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை வழக்குச் செலவாக மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.
மாநில அரசின் பரிந்துரையோடு, மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, இரண்டு மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறது நாடு. மத்திய அரசும் தலைவர்களின் சிலைகளை தூசி தட்டி மாலை மரியாதை செய்து வீர வசனம் முழங்க தயாராகி விட்டது. ஆனால் மறுபக்கம் இதுபோல சுதந்திரத்திற்காக வீடு, வாசல், குடும்பம், சொத்துக்களை இழந்து தீரத்துடன் போராடியவர்களை காலில் போட்டு மிதிக்கும் அவலமும் தொடர்வது நிஜத்தின் வலியை மேலும் அதிகமாக்குகிறது.