விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை!
வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட புலிகளின் ஏராளமான ஆயுதங்களில் சிலவற்றை இப்போது ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஏனையவற்றை விற்பனை செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் என இராணுவ ஊடகப்பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படக்கூடிய நிலையிலுள்ள ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கேணல் கமகே தெரிவித்துள்ளார்.
'கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 3 வகையானவை இருந்தன. பயன்படுத்தப்படக்கூடியவை, சிறு சேதங்கள் கொண்டவை மற்றும் காலாவதியானவை. இவற்றில் பெருமளவு ஆயுதங்கள் நல்ல நிலையிலேயே உள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை நாம் மத்திய ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுப்புவோம். அவர்கள் எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும், எவற்றை விற்க வேண்டும், அழிக்க வேண்டும்" என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள் என கேணல் கமமே கூறியுள்ளார்.