காங்கிரஸ், பாஜக இரண்டுமே தீய சக்திகள், ஆபத்தானவை-கெளடா
கொச்சி: காங்கிரஸ் கட்சியும் சரி, பாஜகவும் சரி, இரண்டுமே தீய சக்திகள்தான், ஆபத்தானவை என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா.
கொச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கெளடா பேசுகையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய கட்சிகளே. இருகட்சி முறையை கொண்டுவர இக்கட்சிகள் முயல்கின்றன. இதை எதிர்த்து போராடவேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில்லாமல் செயல்பட முடியாது.
மாற்று அணி அமைப் பது குறித்து இடதுசாரி கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம். மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள்வது அவசியம். நான் பிரதமராக இருந்த போது, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செய்த தீங்குகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் நடத்தி வரும் சுரங்கக்கொள்ளை குறித்து அனைவரும் அறிவார்கள். அங்கு கொள்ளை என்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி நாடா ளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுரங்கப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது என்றார் கெளடா.