பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும்-வைகோ
மதுரை: பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தலில் இருந்து தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வார இதழ் ஒரு சிலரின் வன்முறையையும், அதனால் ஏற்பட்ட திரைமறைவுச் சம்பவங்களையும் செய்தியாக வெளியிட்டது.
இதற்காக அந்த பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும், வன்முறைச் சம்பவங்களும் நடக்கக்கூடும் என்றும் தங்கள் அச்சுறுத்தலை பகிரங்கமாக விளம்பரமாகவே சிலர் வெளியிட்டுள்ளனர்.
அந்த இதழை மிரட்டும் வகையில் மதுரை முழுக்க சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினருக்கும், செய்தியாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தோர், அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
பத்திரிக்கைகளை மிரட்டுகின்றவர்களையும், அதற்குத் துணை போகும் அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளைத் தடுக்கவும், பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டியது அரசின் உடனடி கடமையாகும் என்று கூறியுள்ளார்.