சவரனுக்கு ரூ 14,000..தங்கம் விலை விர்ர்!
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சவரனுக்கு ரூ 14,000-ஐ நெருங்குகிறது தங்கத்தின் விலை.
முன்பு சற்று குறைந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ. 13 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 13 ஆயிரத்து 784 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு மேலும் ரூ. 32 உயர்ந்து சென்னையில் ரூ. 13 ஆயிரத்து 848 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 1731க்கு விற்கிறது. கோவை, மதுரை நகரங்களில் கிட்டத்தட்ட ரூ 14000-க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தங்கம் ரூ. 14 ஆயிரத்தைத் தொட்டது. இது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில நாட்களில் இந்த நிலை மாறியது. தங்கம் விலை பவுன் ரூ. 13 ஆயிரமாகக் குறைந்தது.
தற்போது விலை இறங்கிய வேகத்தில் மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து பழைய நிலைக்கே வந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் தங்கம் விலை மீண்டும் ரூ. 14 ஆயிரத்தை தாண்டிவிடும்.
ஆடி மாதம் முடிந்து திருமண காலம் தொடங்க இருப்பதால் நகை வாங்குவோர் அதிகரித்துள்ளனர். எனவேதான் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.