புது வழக்குப் பதிவு செய்த கேரள அரசு-மதானியைக் காக்க சிபிஎம் அரசு முயற்சி?
கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதானி கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கேரள போலீசார் அவர் மீது புதிய கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் கர்நாடக போலீஸ் வசம் அவர் சிக்கி விடாமல் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு முயற்சிப்பதாக தெரிகிறது.
பெங்களூரில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கோரமங்களா, மடிவாளா உள்பட பல இடங்களில் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து மதானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து பெங்களூர் உயர்நீதிமன்றமும் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெங்களூர் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் மதானிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.
பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா தலைமையி்ல் 6 போலீஸ் அதிகாரிகள் 10ம் தேதி காலை 4 மணி அளவில் கொல்லம் சென்றனர். அவர்கள் மாவட்ட எஸ்பி ஹர்சிதா அட்டல்லூரியை சந்தித்து மதானியை கைது செய்ய உதவக்கேட்டு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி எழுதிய கடித்ததை கொடுத்தனர்.
இந்நிலையில் சாஸ்தான் கோ்ட்டை போலீசார் மதானி, அவரது கட்சி நிர்வாகிகள் பூந்துரை சீராஜ், கொல்லம் மாவட்ட தலைவர் மயில்காடு ஷா ஆகியோர் மீது சமூக ஓற்றுமையை சீர்குலைக்க முயன்றது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்பட 6 பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கோஷம் எழுப்பியது, முன்னாள் அமைச்சர் ஆரியாடன் கொடும்பாவி எரித்தது ஆகியவை தொடர்பாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் மதானியை கைது செய்யவும், கேரள போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் கர்நாடக போலீசாரிடம் மதானியை ஓப்படைப்பதை தடுக்க கேரள போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மதானி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை அங்கிருந்த மீட்க கேரள அரசு கடுமையாக முயன்றது. இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனும் சரி, முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியும் சரி கடுமையாக முயன்றனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் கருணாநிதி என அவர்கள் கடுமையாக முட்டிப் பார்த்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மதானி கர்நாடக போலீஸாரிடம் சிக்கி விடாமல் தடுக்கும் வகையில், கேரள அரசு அவரைக் காக்க மறைமுகமாக முயல்கிறதோ என்ற சந்தேகம் கர்நாடக போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.