சேலத்தில் வீட்டுக்குள் 6 பேர் கொடூரக் கொலை!
சேலம்: சேலம் அருகே குடும்பச் சண்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் சவுடாம்பிகா நகரில் வசிப்பவர் குப்புராஜ். ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவருக்கு ரத்தினம், சிவகுரு, ராமலிங்கம், விஜயலட்சுமி என நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
ராமலிங்கம் ஒரு வருடத்துக்கு முன் மரணம் அடைந்தார். சிவகுருவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருக்கு அதிகமான மருத்துவ செலவை பார்த்துள்ளார் குப்புராஜ்.
உடல்நிலை சரியில்லாததாலும், வயோதிகம் காரணத்தினாலும் குப்புராஜ் தனது வாரிசுகளுக்கு சொத்துக்களை பிரித்துள்ளார். சிவகுருவுக்கு அதிகமாக மருத்துவ செலவு செய்துவிட்டதால், ரத்தினம் மற்றும் விஜயலட்சுமிக்கு கூடுதலாக சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குப்புராஜ், தாயார் சந்தியம்மாள், சகோதரர் ரத்தினம், ரத்தினம் மனைவி சந்தானலட்சுமி, ரத்தினத்தின் மகன் கௌதமன், சகோதரி விக்னேஸ்வரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அனைவரும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று பிணங்களை மீட்டனர். போலீஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில் சிவகுரு நேற்று சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தார்.
மண்வெட்டி மற்றும் கொடுவாள், வீச்சரிவாள் ஆகியவற்றால் துடிக்க துடிக்க அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். வீடே ரத்தக்களறியாக காணப்பட்டது.
வீட்டின் முதல் அறையில் ரத்தினமும், அவரது மகள் விக்னேஷ்வரியும் பிணமாக கிடந்தனர். அதை அடுத்த படுக்கை அறையில் தாய் சந்திராவின் பிணம் கிடந்தது, உள்ளே இருந்த மற்றொரு படுக்கை அறையில் குப்புராஜ் குளிர் சாதனபெட்டியில் சாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
வீட்டுக்குள் அனைவரையும் ஓடஓட விரட்டி வெட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தனி ஒருவர் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காரணம் ஏராளமான ஆயுதங்களால் அவர்கள் வெட்டப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைகளை கூலிப்படையை அமர்த்தி சிவகுரு செய்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவகுரு சேலம் தாதகாப்பட்டியில் உள்ள தனது வீட்டை ரூ.10 லட்சத்திற்கு விற்று உள்ளார். அந்தப் பணத்தின் ஒரு பகுதியை அவர் கொலையாளிகளுக்கு கொடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிவகுரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி மாலா, மகள்கள் பிரியா, நதியா ஆகியோரை வீடு பார்த்து வேறு இடத்தில் குடியமர்த்தி உள்ளார். தனது மகன் கோகுலுடன் தந்தை வீட்டு அருகேயே வீடு பார்த்து குடி இருந்து உள்ளார். இதனால் ஏற்கனவே இந்தக் கொலைகளை செய்ய திட்டமிட்டு சிவகுரு செயல்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தக் கொலையில் சிவகுருவின் மகன் கோகுலுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என கருதப்படுவதால் அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கோர்ட்டில் சரணடைந்த சிவகுருவின் செல்போன் எண்களை போலீசார் வாங்கி உள்ளனர். இந்த செல்போன்களுக்கு கடந்த ஒரு வாரமாக பேசியவர்கள் யார்-யார் என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்காக ஒரு தனிப்படை போலீசார் கோவை விரைந்து உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட குப்புராஜ் கடந்த 2009-ம் ஆண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் சென்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது சொத்துக்களை அபகரிக்க ஒரு கும்பல் திட்டமிடுவதாகவும், அதற்காக தன்னை அந்தக் கும்பல் கொலை செய்ய சதி செய்வதாகவும் கூறி இருந்தார். இதனால் இந்தக் கொலையில் வேறு சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.
சிவகுருவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜான் நிக்கல்சன் உத்தரவிட்டார். இதையடுத்து மல்லூர் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.