For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கை கோர்த்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்-கூட்டணி குறித்து ஜெ. சூசகம்

Google Oneindia Tamil News

Jayalalitha's Trichy Meeting
திருச்சி: குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் "கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மிஞ்சும் வகையில் பெரும் கூட்டத்தைக் கூட்டி நேற்று திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது அதிமுக.

கோவைக் கூட்டத்தில் கூறியதைப் போல இந்தக் கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வைத்தார் ஜெயலலிதா. மேலும் கருணாநிதிக்கு புதிய பட்டப் பெயரையும் அவர் சூட்டினார்.

வெள்ளமென திரண்டிருந்த அதிமுகவினர் கூட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நின்றபடி பேசிய ஜெயலலிதா தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் காங்கிரஸுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.

அவரது பேச்சின் நகல் செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்டபோது அதில் கை என்ற வார்த்தைக்கு மேல் குறியிடப்பட்டிருந்தது. மேலும் கை என்று அவர் கூறுகையில் சற்று அழுத்தமாகவே கூறினார்.

ஜெயலலிதா பேசுகையில், இந்த தீய சக்திகளை அகற்ற, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் 'கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள் என்றார் ஜெயலலிதா.

'திருக்குவளை தீய சக்தி'

மேலும் முதல்வர் கருணாநிதிக்கு புதிய பட்டப் பெயரையும் அவர் சூட்டினார். இனிமேல் அப்படித்தான் அவரை அழைக்கப் போகிறேன் என்றும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.

என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர். அதைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை.

நேருவையும், இந்திராவையும், காமராஜரையும் பெயரைச் சொல்லித்தானே குறிப்பிடு கிறோம். அதனால் அவர்களின் மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லையே? நாடாளுமன்றத்தில் பேசும்போது அதிமுக எம்பிக்கள், புரட்சித் தலைவி என்றோ, அம்மா என்றோ குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால், பிற்காலத்தில் அவைக் குறிப்புகளைப் படிக்கும்போது, உண்மையான பெயர் வரும் சந்ததிக்குத் தெரியாமலே போய்விடலாம்.

இருப்பினும், பெயரைச் சொல்லி அழைப்பது கருணாநிதிக்கு வருத்தத்தை அளிப்பதால், அவருக்கு எம்ஜிஆர் சூட்டிய பட்டப் பெயரைச் சொல்லி கூப்பிடலாம் என்று இருக்கிறேன். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு சூட்டிய படட்ப் பெயர் என்ன தெரியுமா, தீய சக்தி.

இனிமேல் கருணாநிதிக்கு 'தீயசக்தி' என்ற பெயரைச் சூட்டுவோம். திருக்குவளை தீயசக்தி என்றே கருணாநிதியை அழைப்போம் என்றார் ஜெயலலிதா.

தனது பேச்சின் நிறைவில் 40க்கும் மேற்பட்ட முழக்கங்களை ஜெயலலிதா சொல்ல அதைக் கூடியிருந்த தொண்டர்கள் திரும்பக் கூறி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X