பதவி விலக வேண்டாம்!-ரத்தன் டாடாவுக்கு பங்குதாரர்கள் கோரிக்கை
மும்பை: டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகக் கூடாது என்று டாடா நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை பதவி விலகினாலும், கவுரவ தலைவராகத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
வரும் டிசம்பர் 2012-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்குள் அவரது இடத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது.
தனக்குப் பிறகு தலைவர் பதவிக்கு வரும் நபர் முற்றிலும் தகுதி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரத்தன் டாடா பதவி விலகக் கூடாது என்று கோரியுள்ளனர்.
"டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து தாங்கள் விலகக் கூடாது என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை. ஒருவேளை தாங்கள் விலகுவதாக இருந்தாலும். டாடா குழுமத்தின் கவுரவத் தலைவராக தொடர வேண்டும். முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும்.
டாடா குழுமத்துக்கு தங்களின் பங்களிப்பு அசாதாரணமானது. உலகின் 10வது பெரிய ஸ்டீல் நிறுவனமாக டாடா ஸ்டீலை உருவாக்கிய பெருமை உங்களுக்கே உரியது..." என்று பங்குதாரர்கள் கூறினர்.
பின்னர் டாடா கூறுகையில், "தலைவர் பதவிக்கான பொருத்தமான நபர் தேர்வு குறித்து இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். டாடா ஸ்டீலைப் பொறுத்த வரை, கோரஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது உலகில் பெரிய நிறுவனங்களுள் டாடா ஸ்டீலும் ஒன்றாக மாற உதவியது...," என்றார்.