இந்து முன்னணி சார்பில் கொடி கம்பம் நட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி
ஓசூர்: சுதந்திர தினத்தை கொண்டாட இந்து முன்னணி சார்பில் கொடியேற்ற திட்டமிட்டனர். அதற்காக கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட திட்டமிட்டனர். எனவே, அப்பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வந்த உதயகுமார் (22) என்பவர் இரும்பால் ஆன பைப் ஒன்றை குழி தோன்றி நட்டுக் கொண்டிருந்தார். பைப்பை நட்டபோது அது மின்சார ஒயருடன் உரசியது. இதில் இரும்பு பைப்பின் மூலம் மின்சாரம் பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிர் இழந்தார்.
இதை பார்த்த அண்ணாமலை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த்(32), காமராஜ் நகரைச் சேர்ந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (28) ஆகிய இருவரும் உதயகுமாரை காப்பாற்ற சென்றனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிப்காட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகமாக காணப்பட்டது.