சட்டவிரோத சுரங்கங்களை கட்டுப்படுத்த கமிஷன் அமைத்தது மத்திய அரசு
டெல்லி: சட்டவிரோதமாக நடந்து வரும் சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்ட கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு.
இதுதொடர்பாக 18 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும், அந்த கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுரங்கத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் நடத்திய பல சுற்று ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த கமிஷன் அமைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்டுவது தொடர்பான அனைத்து அறிவுரைகளையும், வழிமுறைகளையும் இந்த கமிஷன் அரசுக்கு பரிந்துரைக்கும்.
கர்நாடகா போன்ற மாநிலங்களில் சட்டவிரோத சுரங்கத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆராயவுள்ளது மத்திய அரசு அமைத்துள்ள கமிஷன்.
விரைவில் கமிஷன் உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்படும் என மத்திய சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழில் பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களின் கையில்தான் இப்போதைய கர்நாடக பாஜக ஆட்சியே சிக்கிக் கிடக்கிறது. ரெட்டிகளுக்கு எதிராக அங்கு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் சமீபத்தில் போர்க்கொடி தூக்கியது நினைவிருக்கலாம்.