தாழையூத்து பஞ்சாயத்து தலைவியின் கையைத் திருகி தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: தாழையூத்து பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேனி காயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிராம சபை கூட்டத்தில் அவரை தாக்கியதாக துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் பொய்யாமணி. இவரது மனைவி கிருஷ்ணவேனி. தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தன்னை நாற்காலியில் அமர்ந்து பணி செய்யவிடாமல் தடுப்பதாக ஊராட்சித் துணை தலைவர் மீது கிருஷ்ணவேனி குற்றம்சாட்டினார். இது குறித்து கலெக்டர் விசாரணையும் நடந்தது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பஞ்சாயத்து அலுவலக வாளகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தன்னை துணை தலைவர் மீரான் கனி கையை திருகி தாக்கியதாக கிருஷ்ணவேனி கூறினார்.
இது குறித்து தனது பகுதி மக்களுடன் சேர்ந்து சென்று தாழையூத்து போலீசில் புகார் செய்தார். அத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்ந்தார். அவரின் புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் துணை தலைவர் மீரான் கனி மீது வழக்கு பதிவு செய்தனர்.