இலங்கை பொருள்களுக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் இருந்து இறக்குமதியாகி ஐரோப்பியச் சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.பி. என்றழைக்கப்படும் வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்தது.
இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டாலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை இன்று முதல் அந்நாடு இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன. தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.