விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்-ஜெ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூரில் க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வயலூர், அகரம், உச்சிமேடு, சூராகபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர்,
திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர்,
திருமங்கலம், கண்டிகை, சோகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், ஆக மொத்தம், 6,921 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் திமுக அரசு தற்போது வெகு வேகமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக, விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய துர்ப் பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே வேளாண் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல் விவசாய உற்பத்தியை மேலும் குறைக்க வழி வகுக்கும். இது மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இடிப்புக்கு ஆளாக நேரிடும்.
இதை கண்டித்தும், க்ரீன் பீல்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சில நாட்களுக்கு முன்பு மேற்படி கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற போது, காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல், கடம்பத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் கே. சுதாகர் உட்பட பொதுமக்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயலை கண்டித்து நான் ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்தேன்
இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளுவர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.