தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் தவறில்லை-சுப்ரீம் கோர்ட் கருத்து
டெல்லி: தமிழக அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சியை வழங்குவது தவறில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சுப்ரமணியம் பாலாஜி என்ற வழக்கறிஞர், மக்களின் வரிப்பணத்திலிருந்து இலவச கலர் தொலைக்காட்சியை தமிழக அரசு வழங்குகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது மனுவில், அரசு தனது அரசியல் நோக்கத்துக்காக இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருள்கள் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாங்கப்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே இலவச திட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.சதாசிவன் மற்றும் பி.எஸ்.செÜஹான் ஆகியோர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,
தமிழக அரசு எடுத்துள்ள முடிவில் தவறேதுமில்லை. பள்ளி மாணவிகளுக்காக இலவச சைக்கிள்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் என அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதில் எந்த தவறும் இல்லை. அதுபோல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்குவதில் தவறேதுமில்லை. இதுவும் நலத்திட்ட உதவிதான் என்று கூறி இறுதி விசாரணைக்காக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.