ஆபாச பேச்சு... எஸ்.எஸ்.சந்திரன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை: முதல்வர் உள்ளிட்டோரை தரக்குறைவாகப் பேசியதாக போலீசார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் எஸ்எஸ் சந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2007-ம் ஆண்டு நெய்வேலியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் பேசி்னார். அவர் முதல்வர் உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக நெய்வேலி நகரிய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக எஸ்.எஸ்.சந்திரன் 5.7.2010 அன்று மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகவில்லை. எனவே, எஸ்.எஸ்.சந்திரனுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி டி.மதிவாணன் விசாரித்தார். அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், 'இந்த வழக்கில் 7 அரசு தரப்பு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ஒரு சாட்சியிடம்தான் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 31 முறை இந்த வழக்கில் எஸ்.எஸ்.சந்திரன் வாய்தா வாங்கியிருக்கிறார். 2 வாய்தாக்களில் அவர் ஆஜராகவில்லை. அப்படி ஆஜராகாமல் இருப்பதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்யவில்லை. ஆகவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது' என்று குறிப்பிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.மதிவாணன், எஸ்.எஸ்.சந்திரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்யவும் நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.