ரயில் பயணிகளுக்கு தாராள குடிநீர்... சென்னை-மும்பையில் புதிய ஆலைகள்!
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் சென்னையை அடுத்த பாலூர் உள்பட 2 இடங்களில் பாட்டில் குடிநீர் ஆலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய ரயில்வே இணை மந்திரி கே.எச்.முனியப்பா நேற்று கூறுகையில், 'ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு மேலும் 6 பாட்டிலிங் ஆலைகளை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அரசு-தனியார் கூட்டு முயற்சியில் இவை அமைக்கப்படுகின்றன.
தற்போது நாங்லாய், தானாபூர் ஆகிய 2 இடங்களில் 'ரயில் நீர்' ஆலைகள் உள்ளன. கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த பாலூர், மும்பையை அடுத்த அம்பர்நாத் ஆகிய 2 இடங்களிலும் பாட்டிலிங் ஆலைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
'ரயில் நீர்' குடிநீர் பாட்டில்களை 168 நிலையங்களில் வழங்க வேண்டும். ஆனால், கடந்த மே, ஜுன் மாதங்களில் 70 நிலையங்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவில்லை', என்றார்.
-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.