அமெரிக்கா... வேலை இழந்தோர் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், "அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் கொள்கைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .
வேலையிழந்தோரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 4.75 லட்சமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது.
தற்போது இது 5 லட்சத்தை எட்டியுள்ளது கவலையளிக்கிறது. சிறிய தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதற்கான கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது", என்றார் அவர்.
ஏற்கெனவே இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். முந்தைய வாரத்தில் இது 4.88 லட்சமாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் தொழில்களுக்கு அதிக சலுகை அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சி மிக மெதுவாக இருப்பதால் வேலையிழப்போரின் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
நவம்பர் மாதத்தில் இடைத் தேர்தலை ஜனநாயக கட்சி சந்திக்க உள்ள நிலையில் இப்போதைய வேலையிழப்பு அதிகரிப்பு கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையைப் போக்க நாடு முழுவதும் உள்ள சிறு தொழில் அதிபர்களை சந்தித்துப் பேச உள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.