ஓணம்-தமிழக-கேரள எல்லையில் போலீசார் அதிரடி வாகன சோதனை
செங்கோட்டை: ஓணம் பண்டிகையையொட்டி தமிழக, கேரள எல்லைப் பகுதியான புளியரையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 24 மணி நேரமும் சுமார் 2 ஆயிரம் கார், பேரூந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வழியே தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி, மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராயம் உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வண்ணம் இந்த சோதனை சாவடியில் கூடுதல் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் நியமித்து தனிதனியாக அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு கேரளாவுக்குள் செல்கிறது.
போலீசாரின் தீவிர சோதனையினால் தடை செய்யப்பட்ட மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லும் புள்ளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.